கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முருகனும் மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இதுகுறித்து அறிந்த மாணவியின் அண்ணன் செல்போனை உடைத்து விட்டார். இதனை அறிந்த ராஜலிங்கம் மாணவியின் வீட்டிற்கு சென்று தனது மகன் வாங்கி கொடுத்த செல்போனை திரும்பி தா என கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது மாணவியின் தரப்பினரான அறிவழகன், காமராஜ், மணிமாறன், அஸ்வின் குமார், கோவிந்தராஜ், குபேந்திரன், ராகேஷ், ஆனந்தராஜ், ஆகாஷ் ஆகியோர் முருகனின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் முருகனின் உறவினர்களான கொளஞ்சி, கலியமூர்த்தி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அஸ்வின் குமார், அறிவழகன் உட்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.