கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகர் தயிர் இட்டேரி ரோட்டில் அம்புரோஸ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி அம்புரோஸ் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அவர் குடிபோதையில் கஞ்சா புகைத்தபடி இருந்ததாக தெரிகிறது. அந்த வழியாக சென்ற பெண்கள் மீது அம்புரோஸ் கஞ்சா புகையை ஊதியதாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த அந்த பகுதியைச் சேர்ந்த விஜய் சங்கர், ராஜ், சந்தோஷ் குமார், பிரவீன் குமார் ஆகிய நான்கு பேரும் அம்புரோசை கண்டித்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அம்புரோஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரவீன் குமார் உட்பட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.