சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு இப்படி தெருவில் சுற்றினால் தான் தொல்லைகள் (ஹராஸ்மென்ட்) ஏற்படுகிறது” என்று கூறியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தக் கருத்து, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

விவாதம் சூடுபிடித்த நிலையில், பெண்ணும், காவலர் கார்த்திக்கும் வீடியோ பதிவு செய்தனர். கார்த்திக், தான் “ஹராஸ்மென்ட்” என்று கூறவில்லை, “அரெஸ்ட்” (கைது) என்று தான் கூறியதாக மூத்த அதிகாரிகளிடம் விளக்கமளித்தார். ஆனால், இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு முறையான புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

திருவான்மியூர் காவல் நிலையம் இதுவரை எந்த தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை, மேலும் காவலர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.