ஆந்திராவில் பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த போது அவரது வயிற்றில் ஒரு மீட்டர் நீளம் உள்ள துணி வைத்து தையல் போட்ட சம்பவம் எட்டு மாதத்திற்கு பின்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் மசுலினிப்பட்டினத்தை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் வயிற்று வலிக்கு சிகிச்சை எடுப்பதற்காக என்டிஆர் மாவட்டம் மயிலாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பை  சேதமடைந்துள்ளதாகவும் இதனை உடனே அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து கர்ப்பப்பை அகற்றுவதற்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது தெரிந்தோ தெரியாமலோ ஒரு மீட்டர் நீளம் உள்ள சர்ஜிகல் கிளாத் எனப்படும் துணியை அந்த பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டு விட்டனர். அந்த பெண்ணும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த சம்பவம் நடந்து 8 மாதம் கடந்துவிட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அந்த பெண்ணுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அலைந்தும் பலன் இல்லை.

இதனை அடுத்து விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவரின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது அவரது வயிற்றுக்குள் ஒரு மீட்டர் நீளம் உள்ள சர்ஜிகல் கிளாத் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் சர்ஜிகல் கிளாத்தை அவரின் வயிற்றுக்குள் இருந்து எடுத்த டாக்டர்கள் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் அலட்சியம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.