மும்பை மாநகரத்தின் பிரசித்தி பெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) ரயில் நிலையத்தில், நள்ளிரவில் லோக்கல் ரயிலின் என்ஜின் அறைக்குள் ராட்சத மலைப்பாம்பு ஒன்று புகுந்த விசித்திரச் சம்பவம் ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்களையும், பயணிகளையும்  அதிர வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 1:40 மணியளவில் ரயில் நிலைய ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த போது, என்ஜினுக்கு அடியில் ஏதோ ஊர்ந்து செல்வதைக் கண்டு அலறியடித்து ஓடியுள்ளனர். தீவிரமாகப் பார்த்த போது, அங்கு இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ‘பிளாக் ராக் பைத்தான்’ (Black Rock Python) என்ற ஆபத்தான மலைப்பாம்பின் குட்டி ஒன்று பதுங்கியிருப்பது தெரியவந்தது.

வழக்கமாக மழைக்காலங்களில் பாம்புகள் தங்களை ஈரப்பதம் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்ள, உலர்ந்த மற்றும் வெதுவெதுப்பான இடங்களைத் தேடி அலைவது வழக்கம் என்பதால், இந்த மலைப்பாம்பும் புகலிடம் தேடி ரயிலுக்குள் புகுந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த அதிகாரிகள், உடனடியாகப் பயிற்சி பெற்ற பாம்பு பிடி வீரர்களை நள்ளிரவிலேயே சம்பவ இடத்திற்கு வரவழைத்து, கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

நள்ளிரவில் ரயிலை இயக்கச் சென்ற டிரைவர்களுக்கே மரண பயத்தைக் காட்டிய இந்த மலைப்பாம்பு மீட்பு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி நெட்டிசன்களை மிரள வைத்து வருகிறது.