தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ஒரு எஸ்டேட் உரிமையாளர் தன்னுடைய ஊழியர்கள் அனைவருக்கும் ராயல் என்பீல்ட் வாகனத்தை பரிசளித்து இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவகுமார் பொன்னுசாமி, கடந்த 20 ஆண்டுகளாக கீழ் கோத்தகிரி பகுதியில் தேயிலை சாகுபடி மற்றும் மழை காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றார்.

இவர் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது தன்னுடைய ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கி வரும் நிலையில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ராயல் என்ஃபீல்ட் இரு சக்கர வாகனத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்துப்போன ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.