தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில்  மாணவர்களை சேர்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டு தேர்வு வருகிற மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற மார்ச் 4-ஆம் தேதி காலை 10:30 மணி முதல் 12 மணி வரை அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கான அடிப்படை மதிப்பீடு தேர்வு நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தம் 240 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த தேர்வுக்கான இடம் மற்றும் இதர ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுதி தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியலை அனுப்ப அறிவுறுத்த வேண்டும். மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் செல்ல பொறுப்பு ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். தேர்வு ஓஎம்ஆர் விடைத்தாளில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். இதற்கிடையே பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு நடத்தும் முறைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியின் வளர்ச்சிக்காக பிற அரசு பள்ளிகளில் உள்ள திறமையான மாணவர்களை தேடி கண்டறிந்து சேர்ப்பது சரியான நடவடிக்கை அல்ல எனவும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கின்றனர்.