நில அபகரிப்பு வழக்கில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ,  பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45.82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு மீட்டது. உபரி நிலங்களாக அறிவித்ததை தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன்,  நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி நிலம் மீட்கப்பட்டதாகவும்,  அதை நேரில் சென்று ஆய்வு செய்தபோது,  சிங்காநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஜெயராம் என்பவரும்,  பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய பாலாஜி உத்தம ராமசாமி என்பவரும்,  அந்த நிலத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்தி,  அதனை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி,  அரசு நிலத்தில் சட்ட விரோதமாக குடியேறுபவர்கள்,  மற்றவரின் பெயருக்கு இந்த இடத்தை மாற்றி இருக்கிறார்கள். இதற்கு அரசியல் மற்றும் அதிகாரிகளின் அழுத்தம் காரணமா ? என விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.அதன் அடிப்படையில் இந்த வழக்கை முழுமையாக விசாரணை செய்து,  நான்கு வார காலத்திற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

நீதிமன்ற உத்தரவுபடி உடனடியாக நடவடிக்கை எடுத்த நில நிர்வாக ஆணையருக்கு  பாராட்டை நீதிபதி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக நிலத்தில் சட்ட விரோதமாக குடியிருந்தவர்கள் அதன் பிறகு  கட்டுமான பணியை உருவாக்கியவர்கள் என அனைவர் மீதும் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து வேண்டும் என்றும்,  குற்றச்சாட்டு நிரூபணமானால் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பொது ஊழியர் என்று கூறிக்கொண்டு நிலத்தை அபகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தப்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார். இதை அடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 4ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

அன்றைய தினம் இந்த ஆக்கிரமிப்பில் இருந்து அதிமுக எம்எல்ஏ, பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டவரை அகற்றி,  நிலத்தையும், கட்டுமானத்தையும் மீட்க வேண்டும். பொது பயன்பாட்டிற்கு அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்வதற்காக தான் வழக்கு நவம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.