கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் இருக்கும் தனியார் மழலையர் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநத்தம் பகுதியில் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி வாகனம் ஏற்றிக்கொண்டு மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வெங்கடேசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கல்லூர் கிராமம் அருகே கிளீனரான கொளஞ்சி என்பவர் பேருந்தில் குழந்தைகளை ஏற்றி கொண்டிருந்தார்.

அப்போது ரவீந்திரன் என்பவர் ஒட்டி வந்த லாரி பள்ளி பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் கொளஞ்சியின் தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.