இங்கிலாந்தில் 28 வயது பெண்ணை எட்டு நாய்கள் சேர்ந்து தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் சர்வே நகரில் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லும் 28 வயது பெண் ஒருவர் எப்போதும் போல சரளை மலைப்பகுதியில் உள்ள எட்டு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று அந்த எட்டு நாய்களும் அந்த பெண்ணை வெறித்தனமாக கடிக்க தொடங்கியது. உடனடியாக அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு குதிரையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பெண்மணி அவருக்கு உதவ முயற்சித்துள்ளார்.

ஆனால் குதிரையில் சென்ற அந்த பெண் குதிரையிலிருந்து தவறி கீழே விழ இரண்டு நாய்கள் அந்த பெண்ணை வெறித்தனமாக கடிக்க தொடங்கியது. உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் காவல்துறைக்கும் அவசர உதவி எண்ணுக்கும் தகவல் தெரிவித்து அந்த நாய்களிடம் இருந்து அந்த இரண்டு பெண்களையும் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 28 வயதான இளம் பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும் குதிரையில் சென்ற பெண்மணி சில மணி நேரம் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு பத்திரமாக வீடு திரும்பினார். இதை அடுத்து அந்த எட்டு நாய்களை பிடித்த காவல்துறையினர் திடீரென்று அந்த நாய்கள் பெண்ணை தாக்க என்ன காரணம் என்று விசாரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து அந்த நாய்களின் உரிமையாளர்கள் கூறுகையில் அவை தடை செய்யப்பட்ட வகையைச் சேர்ந்த நாய்கள் இல்லை என்றும் இதற்கு முன்பாக அந்த நாய்கள் இவ்வாறு நடந்து கொண்டதே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.