தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அமைதியான முறையில் மே 2018 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்க பேரணியாக சென்ற  பொதுமக்கள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர்  காயமடைந்தார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த,  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.  துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,  காவல் ஆய்வாளர்கள் ஹரிகரன்,  மீனாட்சி நாதன்,  பார்த்திபன்,  தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட  முன்னாள் செயலாளர் அர்ச்சுனன் புகார் மனு அளித்தார்.

பின்னர் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிபிஐ விசாரணை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும்,

சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  கொலைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி சண்முகையா,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு படுகொலைகள் வழக்கில் ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என CBI தாக்கல் செய்த  குற்றபத்திரிக்கையை நிராகரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மீண்டும் இந்த வழக்கில் CBI புலன் விசாரணை செய்து,  ஆறு மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்ய வேண்டி அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்.