நேபாள நாட்டில் உள்ள புகழ்பெற்ற சித்வான் தேசிய பூங்கா அருகே அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி சென்ற நபர் ஒருவரை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று ஆக்ரோஷமாக துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சியில் உயிருக்கு பயந்து அந்த நபர் முன்னே ஓடுவதும் அவருக்குப் பின்னால் காண்டாமிருகம் அதிவேகமாக துரத்தி வருவதும் பதிவாகியுள்ளது.

 

யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தேசிய பூங்காவில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வசித்து வரும் நிலையில் அவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மனிதர்களைத் தாக்குவது வழக்கமாக உள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் காணொலியை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வரும் நிலையில் காண்டாமிருகங்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.