நொய்டாவில் உள்ள கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் செக்டர் 16-ல் உள்ள ஹோசியார்பூர் கிராமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளரை துப்பாக்கியுடன் அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியை தூய்மை செய்து கொண்டிருந்த பணியாளரிடம் திடீரென ஒரு வாலிபர் வந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியது  வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

இந்தக் காணொளியை @neerajxpression என்பவர் “ஊழியர் மீது துப்பாக்கி காட்டி தாக்கிய இந்த நபரைக் கைது செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற விவரத்துடன் X-இல் பதிவிட்டுள்ளார். இது பெரும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் சமூக ஊழியர்களும், தூய்மை பணியாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் X-இல் பதிலளித்து, “@noidapolice – தயவுசெய்து உரிய தகவல்களைத் தெரிவித்துவிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கவும்” என கூறியுள்ளனர். இது போன்ற தாக்குதல்கள் அடிக்கடி நடைபெறுவது பொதுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.