சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி மூதாட்டியின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வெளியான போது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த மூதாட்டியின் மகள் வழி பேரனான பிரகாஷ் மூதாட்டியிடம் சம்பவ நாளில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் சூதாட்டம் ஆடுவதற்காக பணம் கேட்டு மூதாட்டியை மிரட்டிய நிலையில் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மூதாட்டியை கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

அவர் இறந்தபின் அவரிடம் இருந்த ரூ. 5000 பணத்தை எடுத்து சூதாட பயன்படுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரகாஷை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.