அக்னி பாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அக்னி பாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயது உடையவர்கள் முப்படையில் நான்கு ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்தது.

ஓய்வூதியம் போன்ற சட்ட ரீதியான சலுகைகள் வழங்கப்படவில்லை என்றாலும் அக்னி வீர் என்று அழைக்கப்படும் வீரர்கள் ராணுவம், விமானப்படை கடற்படையின் கீழ்நிலை ஊழியர்களாக பணியாரத்தப்படுவார்கள் என தெரிவித்தது. இவர்களுக்கு மாத ஊதியம் 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி 2023-24 ஆண்டில் சுமார் 40,000 பேரை அக்னி பாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

இதற்கு பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதற்கட்ட நுழைவுத் தேர்வு மூலம் நிர்வாகத்தினருக்கான செலவு குறைவது மட்டுமின்றி புத்தி கூர்மையுள்ள ஆட்களும் ராணுவத்திற்கு கிடைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உடல் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுபவர்கள் இறுதி கட்டமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். முதற்கட்ட நுழைவு தேர்வுகள் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் சுமார் 200 இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.