கடந்த 2006-ம் ஆண்டு, ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் 4 வயது சிறுவன் பிரின்ஸ் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது, இந்திய ஊடகங்கள் அனைத்தும் அங்கேயே முகாமிட்டிருந்தன. சுமார் 50 மணி நேரம் ராணுவத்தினர் போராடி அந்தச் சிறுவனை மீட்டபோது ஒட்டுமொத்த நாடும் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பிரின்ஸ் ஒரு 24 வயது இளைஞராக மீண்டும் கேமரா முன் தோன்றியுள்ளார். குருக்ஷேத்திர நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டால், பிரின்ஸைச் சந்தித்துப் பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்தச் சிறுவன் இப்போது ஐடிஐ முடித்துவிட்டு அப்ரண்டிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அன்று எலும்பும் தோலுமாக மீட்டெடுக்கப்பட்ட அந்தச் சிறுவன், இன்று ஜிம்முக்குச் சென்று கட்டுமஸ்தான உடலோடு கம்பீரமாக இருப்பதை நவீன் ஜிண்டால் தனது வீடியோவில் பாராட்டியுள்ளார். “அன்று பிஸ்கட், சாக்லேட் கொடுத்துத் தேற்றிய அதே பிரின்ஸ் இன்று ஒரு தன்னம்பிக்கை நாயகனாக நிற்கிறார்” என்று அவர் புகழ்ந்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், “அன்று பிரின்ஸுக்காக நாங்கள் செய்த பிரார்த்தனைகள் இன்றும் நினைவிருக்கிறது” என உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர். காலம் கடந்தாலும், மரணத்தை வென்ற பிரின்ஸின் கதை இன்றும் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.