பெங்களூரில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில், கேட்கும் அனைவரையும் உரைய வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியின் மீது ஏற்பட்ட தகராறு மற்றும் சந்தேகத்தால் ஒரு தந்தை தனது சொந்தக் குழந்தைகளையே ஹோட்டல் அறையில் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பெங்களூரு நகரம் முழுவதையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் நாகவரா பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜி. இம்ரான் (45) என்பவர் ஆவார். தனியார் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு ஷேக் ஸோயா (10) மற்றும் ஷேக் ஜெஹ்ரா (8) என்ற இரு மகள்கள் இருந்தனர். கணவன்-மனைவி இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இம்ரானின் மனைவி கடந்த சில மாதங்களாக அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 9 அன்று மாலை, தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு இம்ரான் அந்த ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். மறுநாள் ஆகஸ்ட் 10 அன்று, அவர் தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, சமையலறை கத்தியால் தனது சொந்தக் கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாலை வேளையில் அறையைச் சுத்தம் செய்ய வந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்காததால், மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தனர். அப்போது சிறுமிகள் இருவரும் படுக்கையில் சடலமாகக் கிடப்பதையும், இம்ரான் குளியலறையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்து ஒரு தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், தனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதற்குத் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் இம்ரான் எழுதியிருந்தார். இக்கொடூரக் கொலைக் குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள முழு உண்மைகளையும் கண்டறிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.