மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மக்களவையின் தற்போதைய 543 இடங்களும், தற்போதைய இருக்கை பங்கீடும் எந்த மாற்றமும் இன்றித் தொடர வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தின் உரிமைகளையும் தென்னிந்திய மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் அரசாங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எனினும், இக்கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 57 எம்பிக்களில் 19 பேர் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடராமல் தனித்து இக்கூட்டத்தைக் கூட்டுவது ஒரு “அரசியல் நாடகம்” என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்தார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைக்காமல் எம்பிக்களை மட்டும் அழைத்ததற்காக அதிமுகவும் இக்கூட்டத்தைப் புறக்கணித்தது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மக்களவையின் எண்ணிக்கையை 815 அல்லது 850 ஆக உயர்த்துவது தமிழ்நாட்டின் அச்சத்தைப் போகாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

மேலும், தொகுதி ஒதுக்கீட்டை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதாவையும் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

மக்களவை இடங்களின் மறுபங்கீடு தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கும் தமிழகம் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் செயல் என்று கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

“>

 

1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பே அடுத்த 30 ஆண்டுகளுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதே திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தொகுதி மறுவரையறை ஆணையத்திற்கு அதிகமான அதிகாரங்களை வழங்காமல், நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.