நாட்டின் அதிநவீன மற்றும் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழும் வந்தே பாரத் இரயிலில், பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரயிலை இயக்கும் லோகோ பைலட் கேபினுக்குள் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுத்த காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.

அதிவேகத்தில் செல்லும் இரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து, பாதுகாப்பு விதிகளையெல்லாம் அடியோடு மீறி நடைபெற்ற இந்த விபரீத விளையாட்டு இரயில்வே நிர்வாகத்தின் கண்காணிப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

இரயிலின் கட்டுப்பாட்டு அறையான லோகோ பைலட் கேபின் என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட மற்றும் மிகுந்த கவனம் தேவைப்படும் ஒரு இடமாகும். அங்குச் சென்று இரயிலை இயக்கும் ஓட்டுநர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ஒரு பெண் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்ததும், அதற்கு அங்குள்ள ஊழியர்கள் துணையாக இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் லைக்குகளுக்கும் வியூஸ்களுக்கும் ஆசைப்பட்டு, வந்தே பாரத் போன்ற அதிவேக இரயிலின் முக்கியமான கட்டுப்பாட்டுப் பகுதியையே ஒரு பொழுதுபோக்குக் கூடமாக மாற்ற முயன்ற இந்த அலட்சியப் போக்கு, பயணிகளின் உயிருடன் விளையாடும் செயலன்றி வேறில்லை.

இந்த விபரீதச் செயலின் காணொளி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவியதைத் தொடர்ந்து, இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கடமையை மறந்து, பாதுகாப்பு நெறிமுறைக் விதிமுறைக் காற்றில பறக்கவிட்ட லோகோ பைலட் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இரயில்வே வாரியத்திற்கு கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் இனிமேல் நிகழாத வண்ணம், சம்பந்தப்பட்டவர்கள் மீது இரயில்வே நிர்வாகம் முன்மாதிரியான கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

“>