உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் சரமாரியாகக் காலால் உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நோயாளி தரையில் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த துப்புரவு பணியாளர் பிங்கி என்பவர் அவரைத் தொடர்ந்து பலமுறை எட்டி உதைப்பதும், கடுமையாகத் திட்டுவதும் அந்த 39 வினாடி வீடியோவில் பதிவாகியுள்ளது.

அருகில் இருந்த பாதுகாவலர்களும் மற்றவர்களும் இதைக் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்தது மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த அநாகரிகமான செயலைத் தொடர்ந்து, துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கின் உத்தரவின் பேரில் அந்தப் பெண் பணியாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து விரிவான விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“>

 

நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து ஆறுதல் கூற வேண்டிய அரசு மருத்துவமனையிலேயே, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இத்தகைய கொடுமை இழைக்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.