மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப், ஷாப்பிஃபை என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறியியல் துறையில் சலாவுதீன் அப்துல்-காஃபி என்பவர் கடந்த 14 வருடங்களாகப் பணியாற்றி வந்தார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு ₹4.25 கோடி என்ற பிரம்மாண்டமான சம்பளம் கிடைத்து வந்தது.

இருப்பினும், இந்த இயந்திரத்தனமான கார்ப்பரேட் வாழ்க்கையில் சலிப்புற்ற அவர், உண்மையான மனித தொடர்புகளையும் மன அமைதியையும் தேடி அந்த சொகுசு வேலையைத் துணிச்சலாகத் துறந்தார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் பகுதிக்குக் குடியேறிய அவர், அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டே, தனது நீண்ட நாள் கனவான அசல் டெக்சாஸ் பாணி சமையல் முறையைக் கற்றுக்கொள்ள கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதோடு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2024 டிசம்பரில் “காஃபே பார்பிக்யூ” என்ற உணவகத்தை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். முதல் நாளிலேயே சமூக ஊடகங்களில் இவரது ஹோட்டல் வைரலாகி, மூன்று நாட்கள் சமைக்கப்பட்ட ‘ஸ்மோக்டு பிரிஸ்கெட்’ உணவு வகைகள் மதியத்திற்குள்ளேயே விற்றுத் தீர்ந்தன. புகழ்பெற்ற அமெரிக்க உணவு இதழ்களும் இவரது சமையல் திறமையைப் பாராட்டியுள்ளன.

தற்போது இந்த உணவகம் ஆண்டுக்கு ₹21.7 கோடி வருவாய் ஈட்டுகிறது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்த வணிகம் கவர்ச்சிகரமாகத் தெரிந்தாலும், சலாவுதீன் வாரத்திற்கு 80 மணிநேரம் உழைக்கிறார் மேலும் ஹோட்டலின் வாடகை, மூலப்பொருட்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் என மாதச் செலவு ₹2 கோடிக்கு மேல் ஆகிறது.

இதனால் உணவகத்தில் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயையும் அதன் வளர்ச்சிக்காகவே மீண்டும் முதலீடு செய்துவிட்டு, தனது பழைய சேமிப்புப் பணத்திலேயே தற்போதைய வாழ்க்கையை நடத்தி வருகிறார். கணினித் திரையின் முன் அமர்ந்து கோடிகளைச் சம்பாதித்ததை விட, தனது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான முகங்களைப் பார்ப்பதில்தான் தனக்கு உண்மையான நிம்மதி கிடைப்பதாக சலாவுதீன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.