இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரின் வாடகை வீட்டுப் பிரச்சனை குறித்து, பிரணவ் தாஸ் என்ற இந்திய டிராவல் பிளாகர் வியட்நாம் நாட்டுடன் ஒப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பெங்களூருவின் இந்திரா நகர் அல்லது கோரமங்களா போன்ற முக்கியப் பகுதிகளில் மாத வாடகையாக 35,000 ரூபாய் கொடுத்தால் கூட, பெரிய அளவில் எந்த வசதிகளும் இல்லாமல், ஜன்னல் கூட இல்லாத அல்லது வெறும் காற்று மாசைக் கொண்ட ஒரு சாதாரண 1 BHK வீடுதான் கிடைக்கும் என்றும், அதற்கும் ஏகப்பட்ட அட்வான்ஸ் தொகை கேட்கிறார்கள் என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
View this post on Instagram
ஆனால், அதே 35,000 ரூபாய் பட்ஜெட்டில் வியட்நாமின் ‘டா நாங்’ (Da Nang) என்ற கடற்கரை நகரத்தில், எக்கச்சக்க அட்வான்ஸ் தொல்லைகள் எதுவும் இல்லாமல், தினசரி நெரிசலில் சிக்கி அவதிப்படாமல், வீட்டின் உள்ளே இருந்தபடியே ஒட்டுமொத்தக் கடலையும் ரசிக்கும்படியான மிக பிரம்மாண்டமான ஒரு சொகுசுFlat-ல் சொகுசாக வாழ முடியும் என்பதை அவர் வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய நகரங்களில் இளைஞர்கள் தங்களின் வேலைக்காகக் கூடுதல் வாடகை கொடுத்து, மோசமான வாழ்க்கைச் சூழலைத் தங்களின் விதி என்று ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “உண்மைதான், இந்தியாவில் அடிப்படை வசதிகளுக்கே நாம் இவ்வளவு செலவழிக்க வேண்டியுள்ளது” என்றும், இன்னும் சிலரோ “தயவுசெய்து இந்த ரகசியத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லை என்றால் இங்கேயும் கூட்டம் கூடி இந்த இடத்தையும் பெங்களூரு மாதிரி மாற்றிவிடுவார்கள்” எனத் தங்களின் குமுறல்களையும் கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர்.
