உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மின் திருட்டைத் தடுப்பதற்காகச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது இரண்டு இடங்களில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜானகிபுரம் பகுதியில் மின் திருட்டு நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சோதனை நடத்தச் சென்ற இளநிலைப் பொறியாளர் அசோக் குமார் உள்ளிட்ட குழுவினரை, அங்கிருந்த அஜய் தீட்சித் மற்றும் அவரது ஆட்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது, அதிகாரி அசோக் குமாரை மண்வெட்டியால் தலையில் அடித்ததோடு மட்டுமல்லாமல், வளர்ப்பு நாய்களை ஏவி விட்டு கடிக்க வைத்துள்ளனர். படுகாயமடைந்த அதிகாரிகள் தப்பியோடி உயிர்பிழைத்த நிலையில், இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல், சஆதத்கஞ்ச் பகுதியின் சௌபாட்டியா என்ற இடத்திலும் மின் திருட்டைப் பிடிக்கச் சென்ற மின்வாரியக் குழுவினரை ஜலீல் அகமது மற்றும் அப்துல் காலிக் தலைமையிலான 30 முதல் 40 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் முற்றுகையிட்டுள்ளது.

“>

 

அக்கும்பல் அரசு ஆவணங்களைக் கிழித்தெறிந்து, மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சந்தோஷ் யாதவ் என்பவரைத் தரதரவென இழுத்துச் சென்று ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் லக்னோவின் உள்ளூர் காவல் நிலையங்களில் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் புகாரளிக்கப்பட்டு, வன்முறையாளர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.