நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் தோல்வியைச் சந்தித்ததால், அக்கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சு எழுந்த சூழலில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சட்டசபையில் தவெக அரசுக்கு ஆதரவாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உட்பட 25 எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டது அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உட்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இந்த மோதலின் உச்சகட்டமாக, சிவி சண்முகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியர் பதவியைக் கல்யாணசுந்தரம் ராஜினாமா செய்தார்.

இதனால் கட்சியில் பெரும் பரபரப்பு நீடித்து வந்த நிலையில், தற்போது அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் குறைந்து மீண்டும் இணக்கமான சூழல் திரும்பத் தொடங்கியுள்ளது.

இதன் அறிகுறியாக, ‘நமது அம்மா’ நாளிதழில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் செய்திகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன; மேலும், அந்த நாளிதழின் நிறுவனர் என எடப்பாடி பழனிசாமியின் பெயரும் மீண்டும் அதில் இடம் பெற்றுள்ளது.