பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் குராலி பகுதியில், 4 வயது சிறுமி ஒருவர் பகல் நேரத்திலேயே அவரது தாத்தா, பாட்டி வீட்டின் முன்பிருந்து கடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்தச் சிறுமி பள்ளி முடிந்து தனது தாத்தா, பாட்டியுடன் ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பாட்டி வீட்டின் கேட்டைத் திறக்கச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறுமியைப் பறிக்க முயன்றுள்ளனர்.

தாத்தா அவர்களைத் தடுத்துப் போராடியபோது, அங்கு வந்த ஒரு வெள்ளை நிற கார் மற்றும் அதிலிருந்த கும்பல், முதியவர்களைத் தாக்கிவிட்டுச் சிறுமியை வலுக்கட்டாயமாகக் காரில் கடத்திச் சென்றுள்ளது.

தாத்தா, பாட்டி இருவரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் காரை மறிக்க முயன்றும், அக்குும்பல் தப்பி ஓடிவிட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காரைத் துரத்தியும் அவர்களால் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை.

இந்தக் கடத்தல் சம்பவம், அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு இடையே நீதிமன்றத்தில் நடந்து வரும் குழந்தை காவல் உரிமைப் பிரச்சனை காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியரான சிறுமியின் தந்தை, தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும்தான் ஆட்களை வைத்து இந்தத் திட்டமிட்ட கடத்தலை நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக்கொண்டு தனது மாமியார் மற்றும் சந்தீப் குமார் என்ற நபரின் உதவியோடு மனைவி இந்தக் கடத்தலை அரங்கேற்றியுள்ளதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

“>

 

இந்த புகாரின் பேரில், வைரல் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு மொஹாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சிறுமி மீட்கப்படாத நிலையில், தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.