புனேயின் பிம்ப்ரி பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் வெடிகுண்டு பயம் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் புனேயின் ஹடப்சர் பகுதியில் ஒரு நேரடி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தச் சம்பவத்தை காவல்துறை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது.

மேலும் வெள்ளிக்கிழமை இரவு சாந்த் துக்காராம் நகர் போலீசாருக்கு இந்த மர்மப் பெட்டி குறித்து தகவல் கிடைத்தவுடன், பிம்ப்ரி-சிஞ்ச்வட் காவல்துறையின் குற்றப்பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பெண்கள் விடுதி வளாகம் உடனடியாக செய்யப்பட்டு, அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பரபரப்பான சூழ்நிலைக்குப் பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள் குழு அந்தப் பெட்டியை மிகுந்த எச்சரிக்கையுடன் திறந்து சோதித்தது. ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்தபோது அதற்குள் ஒரு பெரிய ‘டெடி பியர்’ பொம்மை இருந்தது தெரியவந்தது. அந்தப் பொம்மையை முழுமையாகச் சோதித்ததில், அதில் எந்தவொரு ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் ஒரு மாணவிக்கு கொரியர் மூலம் வந்த இந்த டெடி பியர் பார்சல், கவனக்குறைவாக அங்கே தவறவிடப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அது வெடிகுண்டு அல்ல, வெறும் பொம்மைதான் என்பது தெரிந்ததும் போலீசார், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய போதிலும், அவசர காலத்தில் காவல்துறையின் விரைவான செயல்பாட்டிற்கு ஒரு சிறந்த ‘மாக் ட்ரில்’ போல அமைந்தது.