அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூர் பகிச்சா அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, 51 வயதான முகமது ஆரிபுல் இஸ்லாம் என்ற ஆசிரியர் மாணவர்களைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவது தெரியவந்தது. மேலும், ஒரு குழந்தையை வகுப்பறை ஜன்னல் நோக்கி அவர் தள்ள முயன்றதும், சில மாணவர்களைத் தனக்கு மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆத்திரமடைந்த பெற்றோர்களும், மாணவர் அமைப்புகளும் பள்ளிக்கு முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து கடந்த மே 5-ஆம் தேதி பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் கல்வித்துறையிடம் முறையான எழுத்துப்பூர்வப் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில், மாணவர்களைத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அந்த ஆசிரியரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.

“>

 

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.