கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பத்ராயனபுரா பிரதான சாலை அருகே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி காலை எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், சுமார் 10 முதல் 12 வயதிற்குட்பட்ட 6 சிறுவர்கள் ஒரே ஸ்கூட்டரில் அமர்ந்து செல்கின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஸ்கூட்டரை ஒரு சிறுவனே ஓட்டிச் செல்கிறார். ஹெல்மெட் இன்றி, எவ்வித பெரியவர்களின் கண்காணிப்பும் இன்றி அவர்கள் செல்லும் காட்சி காண்போரை உறைய வைத்துள்ளது. இந்த விபரீதக் காட்சியை ஸ்ரேயாஸ் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பெங்களூரு போலீசாரை டேக் செய்துள்ளார்.

 

“இது வெறும் கவனக்குறைவு அல்ல, இது குற்றச் செயல்” என்று பதிவிட்டுள்ள அவர், அந்த ஸ்கூட்டரின் எண்ணையும் (KA05JZ9065) வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அந்தப் பெற்றோரை ஒரு வாரமாவது சிறையில் தள்ள வேண்டும்” எனத் தங்களது ஆத்திரத்தைக் கொட்டி வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள பெங்களூரு போக்குவரத்து போலீசார், வாகன உரிமையாளர் மற்றும் சிறுவர்களின் பெற்றோரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.