ஹைதராபாத்தில் உள்ள நாச்சாரம் – மல்லாப்பூர் பகுதியில், சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ செய்வதற்காக ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் மிதுன், பால்கனி கம்பியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். தனது நண்பர்கள் செய்த வீடியோக்களால் ஈர்க்கப்பட்ட மிதுன், அதேபோல ஒரு வீடியோவை எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான்.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். பீகாரைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் குடும்பம் இந்த எதிர்பாராத இழப்பால் நிலைகுலைந்து போயுள்ளது.

சமூக வலைதள மோகத்தால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ஆபத்தானப் போக்குகள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மற்றொரு சம்பவத்தில், ஏசி பழுதுபார்க்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 15 வயது சிறுவன் நைதிக் என்பவனும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளான்.

“>

 

உரிய பாதுகாப்பு இல்லாமல் சிறுவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தியது மற்றும் கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.