பீகாரின் பகாஹா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு அங்கிருந்த பாதுகாவலர் (Security Guard) தையல் போட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலை விபத்தில் காயமடைந்த வசீம் அக்ரம் மற்றும் சுரேந்திர பாசி உள்ளிட்ட நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். ஆனால், அங்கு போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், ஒரு பாதுகாப்புக் காவலர் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்து நோயாளிக்குத் தையல் போட்டுள்ளார். மருத்துவ ரீதியாகப் பயிற்சி பெறாத ஒருவர் தையல் போட்டது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

​மருத்துவ விதிமுறைகளின்படி, தகுதியான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய அறுவை சிகிச்சை அறைக்குள், பாதுகாவலர் தையல் போட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தாலும், கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி இத்தகைய அலட்சியமான செயலில் ஈடுபட்டதாகக் காயமடைந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் நிலவும் இத்தகைய மோசமான சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.