டெல்லியில் உள்ள சத்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் வாலிபர் ஒருவர் சிக்கிக்கொண்ட நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக கால் நழுவி விழுந்த அந்த வாலிபர், தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள சிறிய இடுக்கில் சிக்கி வெளியே வர முடியாமல் துடித்துள்ளார்.

 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடிய அந்த வாலிபரை, மீட்புக் குழுவினர் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். இந்த கோர விபத்தில் அந்த வாலிபரின் உடல் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட “திக் திக்” வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.