மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் வள முனையமான கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள சூழலில் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பென்டகன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதற்காக மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்கா தனது கூடுதல் ராணுவ வீரர்களைக் குவித்து வருவது போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளதைக் காட்டுகிறது. அமெரிக்காவின் இந்தத் தரைவழித் தாக்குதல் எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் புரட்சிகரக் காவலர் படை அதிரடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள அந்த வீடியோவில் அருகில் வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என்று அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளது.

இதன் மூலம் வான்வழித் தாக்குதல் மட்டுமின்றித் தரைவழித் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தாங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை ஈரான் உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.