கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலாப் பேருந்து ஒன்றில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமைப் புகழ்ந்து தள்ளும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் அந்தப் பேருந்தின் வெளிப்புறத்தில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட உள்ளூர் மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் அந்தப் பேருந்தைச் சிறைபிடித்துத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒருவரைப் பெருமைப்படுத்தும் வகையில் இத்தகைய வாசகங்கள் இடம்பெற்றிருப்பது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசவனஹள்ளி காவல்துறையினர் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்திப் பேருந்தைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பொதுமக்களிடையே பகையைத் தூண்டுதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகச் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் தடுத்து வைத்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திட்டமிட்டே இத்தகைய வாசகங்கள் இடம்பெற்றனவா அல்லது கவனக்குறைவால் நேரிட்டதா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பகுதியில் அமைதியைப் பேண பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.