பீகாரில் நடைபெற்று வரும் சிவான் சேலஞ்சர்ஸ் ட்ராபி (Siwan Challengers Trophy) கிரிக்கெட் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பட்கரியா மற்றும் பாபா லெவன் தரோலி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத மெகா டிராமா அரங்கேறியுள்ளது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பேட்டர் பந்தை அடிக்கத் தவறினார்.

இதனால் தாங்கள் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்த பாபா லெவன் ரசிகர்கள், உற்சாக மிகுதியில் கொடிகளுடனும், ஒரு ரசிகர் கையில் பிளாஸ்டிக் நாற்காலியுடனும் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றியைத் கொண்டாடத் தொடங்கினர். ஆனால், ரசிகர்களின் இந்த மகிழ்ச்சி அடுத்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியாக மாறியது.

அந்தப் பந்தை நடுவர் ‘வைடு’ (Wide) என்று அறிவிக்க, ஸ்கோர் சமமானது. மைதானத்திற்குள் புகுந்த ரசிகர்களை வர்ணனையாளர் வெளியேறச் சொன்னதைத் தொடர்ந்து, மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 1 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஜெயித்தோம் என நினைத்து மைதானத்திற்குள் புகுந்து ஆட்டம் போட்ட ரசிகர்களுக்கு, இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த வினோதமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.