நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கோடாங் மாவட்டத்திற்கு ஒரு சடலத்தை ஏற்றிச் சென்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. பாலாபேசி பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தரையிறங்க முயன்ற போது பலத்த காற்று அல்லது தரையிறங்கும் போது எழுந்த தூசு காரணமாக நிலைதடுமாறி ஹெலிகாப்டர் கவிழ்ந்து நொறுங்கியது.

இந்த விபத்தின் போது ஹெலிகாப்டர் மலையடிவாரத்தில் மோதி உருண்டு விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாக உள்ளது.

 

இந்த ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகள் மற்றும் விமானி இருந்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு மட்டும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்தவர் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக காத்மாண்டுவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் நேபாள விமான போக்குவரத்து ஆணையம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.