மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் யுன்னான் மாகாணத்தில் உள்ள புவெர் நகரின் சென்யுவான் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் மலைப்பாதையில் சாதாரண வேகத்தில் தனது வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழந்தது. ஒரு சில நொடிகளில் பைக் சாலையோரப் பள்ளத்தை நோக்கித் திரும்பியது. அந்தப் பெண் வாகனத்தைச் சீர் செய்ய முயற்சித்தும் பலனின்றி பைக் மற்றும் வாகனத்துடன் அப்படியே பள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

 

இந்த முழுச் சம்பவமும் அந்தப் பெண்ணுக்குப் பின்னால் வந்த காரின் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் நிலை குறித்துப் பலரும் கவலை தெரிவித்தனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாகத் தான் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியதாக அந்தப் பெண் பின்னர் இணையதளம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது போதிய அனுபவமும் கவனமும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகச் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருவதுடன், மலைப்பாதை பயணங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.