கோரக்பூர் அருகே உள்ள சிக்கரிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 19 நோயாளிகளுக்குக் கண் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 பேருக்குக் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்குக் கண்பார்வை திரும்பக் கிடைக்காது என்பதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்குச் செயற்கைக் கண் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தச் சிகிச்சைக்குப் பின் பலருக்குக் கண்ணில் கடுமையான வலி, வீக்கம் மற்றும் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் உரிமம், மருத்துவர்களின் தகுதி மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முறையாகப் புகார் அளிக்கப்படாததால், காவல் துறையினர் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.

இருப்பினும், விசாரணை அறிக்கை வந்தவுடன் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.