உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினரே மிரளும் வகையில் ஒரு பகீர் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு தலைமை எழுத்தராக (Head Clerk) பணியாற்றும் அஸ்கர் அலி என்பவரிடம், தனது மனைவியின் ஊதியக் குறைப்பு குறித்துக் கேட்கச் சென்ற வழக்கறிஞர் பாரூக் அகமது கான் சுட்டுக் கொல்லப்பட்டார். பாரூக்கின் மனைவி கௌசியா அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் அலுவலகத்திற்குத் தாமதமாக வந்ததாகக் கூறி அஸ்கர் அலி ஊதியத்தைக் குறைத்ததே இந்த மோதலுக்கு மூலக் காரணமாக அமைந்துள்ளது.

​புதன்கிழமை மதியம் இது குறித்துப் பேச பாரூக் அலுவலகத்திற்குச் சென்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அஸ்கர் அலி தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்ட, அதைத் தட்டிப் பறிக்க முயன்ற பாரூக் மீது குண்டு பாய்ந்தது. குண்டு அடிபட்ட பாரூக் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சாய, அவரது மனைவி கௌசியா அலறியபடி வெளியே ஓடி வந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பாரூக் உயிரிழந்தார். இந்தக் கொடூரக் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கொலையைச் செய்துவிட்டுத் தலைமறைவான அஸ்கர் அலியைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.