பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், போலீஸ் பணிக்காகத் தயாராகி வந்த நிதீஷ் குமார் என்ற இளைஞர், மர்ம கும்பலால் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நூலகத்திற்குச் சென்ற நிதீஷை ஒரு கும்பல் கடத்திச் சென்று, அவருக்கு மதுபானம் கொடுத்து, ஒரு கோயிலில் வைத்து லட்சுமி குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், நிதீஷ் போதையில் தள்ளாடுவதும், வேறொரு நபர் அவரது கையைப் பிடித்து மணமகளுக்கு மாலை போட வைப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

​திருமணம் முடிந்த கையோடு, நிதீஷை அவரது ‘மாமனார்’ வீட்டில் ஒரு அறையில் வைத்துப் பூட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, விரைந்து செயல்பட்ட சமஸ்திபூர் போலீஸார், நிதீஷை அந்த வீட்டில் இருந்து மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரில் நீண்ட காலமாக நிலவி வரும் இந்த ‘பகடுவா விவாக்’ (மாப்பிள்ளையை கடத்தித் திருமணம் செய்வது) எனும் கலாச்சாரம் இன்னும் ஒழியவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.