மும்பையின் பரபரப்பான காட்கோபர் ரயில் நிலையத்தில், பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் புர்கா அணிந்த நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ரயிலில் ஏறியதுமே அங்கிருந்த பெண் பயணிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புர்கா அணிந்திருந்தாலும் அவரது உடல்வாகு மற்றும் செயல்பாடுகள் ஒரு ஆணின் தோற்றத்தை ஒத்து இருந்ததால், அங்கிருந்த பெண்கள் அவரைத் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க முயன்றுள்ளனர். தான் பிடிபட்டு விடுவோம் என்று பயந்த அந்த மர்ம நபர், ரயில் அடுத்த நிலையத்தை அடைவதற்கு முன்பே பெட்டியிலிருந்து குதித்துத் தப்பியோடிவிட்டார்.

​இந்தச் சம்பவத்தை அங்கிருந்த பெண் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “புர்கா அணிந்து ஒரு ஆண் லேடீஸ் கோச்சில் ஏறிவிட்டான், அவன் எதற்காக வந்தான் என்பது தெரியவில்லை, பெண்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று அந்த வீடியோவில் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் யார்? ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட அவர் இப்படி வேடம் அணிந்து வந்தாரா? என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.