தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த கமல்ஹாசனிடம், “நீங்கள் பேசுவது யாருக்கும் புரியவில்லை என்கிறார்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “சில சமயம் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினால் கூட, ‘என்னங்க சொல்றீங்க.. எனக்குப் புரியலையே’ என்று சொல்வதுதான் சரியான பதிலாக இருக்கும். ஏன்னா, நான் இப்படித்தான் சொல்றீங்களானு கேட்டு, அவங்க ஆமான்னு சொல்லிட்டா அப்புறம் என்ன பண்றது?” என்று நக்கலாகக் கேட்டு அதிர வைத்தார். உண்மையில் பலருக்குப் புரிந்தாலும், புரிந்தது என்று ஒத்துக்கொண்டால் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற பயத்தில்தான் “புரியவில்லை” என்று நாடகம் ஆடுவதாகவும், அப்படி நடிப்பவர்களுக்குப் புரியும் வரை தான் சொல்லிக்கொண்டே இருப்பேன் என்றும் கெத்தாகப் பதிலளித்தார்.

​மேலும், ஆளுங்கட்சித் தலைவர்களிடம் கூட்டணி குறித்துப் பேசும்போதும் இப்படியேதான் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, “கேமராவுக்கு முன்னால் ஒரு பேச்சு, பின்னால் ஒரு பேச்சு இருக்கும்; ஏனென்றால் நான் ஒரு நடிகன்” என்று பக்கா அரசியல் ராஜதந்திரத்துடன் பதிலளித்தார். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம், வரும் தேர்தலில் கௌரவமான தொகுதிகளைப் பெற்றுத் தனது ‘கைவிளக்கு’ சின்னத்திலேயே போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. ஒரு பக்கம் ‘தக் லைஃப்’ போன்ற பெரிய படங்கள், மறுபக்கம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் என இரண்டு தளங்களிலும் கமலஹாசன் காட்டும் வேகம் தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.