பிட்காயின் வர்த்தகத்தில் இவ்வளவு சம்பாதித்ததாக இளைஞர் கூறியதைக் கேட்டு, சமூக வலைதளங்களில் விவாதமே கிளம்பியுள்ளது. அனிருத்தாச்சார்யாவின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் எப்போதும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்றவை.

சமீபத்தில் அவரது தர்பாரில் ஒரு இளைஞர் மைக்கை பிடித்துப் பேசுகையில், “2022-ல் நான் செய்த ஒரு முதலீடு (FD) இப்போது 30 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது” என்று கூறி அங்கிருந்தவர்களை அதிர வைத்தார்.

முதலில் 30 ஆயிரம் ரூபாயா என அனிருத்தாச்சார்யா கேட்க, அந்த இளைஞரோ “இல்லை மகாராஜ், 30 ஆயிரம் கோடி ரூபாய்” என அழுத்தமாகக் கூறினார்.

உடனே ஆச்சரியமடைந்த மகாராஜ், “நீ என்ன வேலை செய்கிறாய்?” எனக் கேட்க, அந்த இளைஞர் தான் பிட்காயின் (Bitcoin) வர்த்தகம் செய்வதாகவும், புத்தகங்கள் எழுதுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனது சொத்தில் 50 சதவீதம் அதாவது 15 ஆயிரம் கோடி ரூபாயைச் சனாதன தர்மத்திற்காக உங்களுக்கும், பாகேஸ்வர் தாம் (Bageshwar Dham) உள்ளிட்ட ஆன்மீக மையங்களுக்கும் தானமாக வழங்க விரும்புவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட அனிருத்தாச்சார்யா, “பணம் எங்களுக்கு வேண்டாம். உன்னிடம் இவ்வளவு பணம் இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் பள்ளிகளைத் தொடங்கு. சமூக சேவை செய்” என மிக முதிர்ச்சியாகப் பதிலளித்தார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “இவரால் எப்படி இவ்வளவு சம்பாதிக்க முடிந்தது?” என நெட்டிசன்கள் ஒருபுறம் வியந்தாலும், “பிரபலமாவதற்காக இப்படிப் பேசுகிறார்கள்” எனப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.