மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வட்டாட்சியர் ஷனி திவேதி என்பவரை மணல் மாஃபியாக்கள் காரால் மோதி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு பியோஹாரி காவல் எல்லைக்குட்பட்ட கர்பா திராஹா பகுதியில், காட்டிலிருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டரைத் தடுத்து நிறுத்த வட்டாட்சியர் தனது குழுவினருடன் சென்றார்.

 

அப்போது மணல் மாஃபியாக்கள் தங்களது டிராக்டரை வட்டாட்சியரின் அரசு வாகனத்தின் மீது வேண்டுமென்றே மோதி அவரை நிலைகுலையச் செய்தனர். மேலும், அவர்கள் தப்பிச் செல்லும்போது துரத்தி வந்த அரசு வாகனத்தின் வேகத்தைக் குறைக்க, டிராக்டரிலிருந்து மணலைச் சாலை முழுவதும் கொட்டி அதிகாரியின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், டிராக்டர் உரிமையாளரின் மகன் மோட்டார் சைக்கிளில் வந்து வட்டாட்சியரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில், பியோஹாரி போலீஸார் காம்தா பைஸ் மற்றும் அவரது மகன் அமர்தீப் பைஸ் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதோடு, சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 6 டிராக்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஷாடோல் மாவட்டத்தில் ஏற்கனவே மணல் மாஃபியாக்களால் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் மீண்டும் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.