பெங்களூரு ஜே.பி. நகர் பகுதியில் கடந்த அக்டோபர் 25 அன்று இரவு, உணவு டெலிவரி செய்யும் 24 வயது இளைஞர் தர்ஷன் என்பவர் கார் ஏற்றி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், மனோஜ் குமார் என்ற நபரின் கார் கண்ணாடியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

இதனால் ஏற்பட்ட சிறு உரசலுக்கு தர்ஷன் மன்னிப்பு கோரிய போதிலும், ஆத்திரமடைந்த மனோஜ் மற்றும் அவரது மனைவி ஆரத்தி சர்மா ஆகியோர் தர்ஷனை காரில் பின்தொடர்ந்து சென்று மோதியுள்ளனர். இந்த விபத்தில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவருடன் சென்ற நண்பர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“>

இந்த சம்பவம் குறித்து முதலில் விபத்து என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தம்பதியினர் இருவரும் முகக்கவசம் அணிந்து சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்து, அங்கு சிதறி கிடந்த காரின் உடைந்த பாகங்களை மறைக்க முயன்றது தெரியவந்தது.

மேலும் கேரளாவைச் சேர்ந்த களரிப்பயிற்று பயிற்சியாளரான மனோஜ் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் தற்போது கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாலைகளில் ஏற்படும் சிறு விவாதங்கள் எவ்வளவு கொடூரமான குற்றங்களாக மாறுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.