கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே, இந்தியாவைச் சேர்ந்த 20 வயது ஆராய்ச்சி மாணவர் ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி மதியம், அப்பகுதியில் உள்ள ஒரு நடைபாதையில் காயங்களுடன் கிடந்த ஷிவாங்கை மீட்ட போலீசார், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இந்த கொடூர சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. கொலையாளிகள் தப்பியோடிவிட்ட நிலையில், அவர்களைப் பிடிக்க டொராண்டோ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ​இந்த சோகமான சம்பவத்திற்கு டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் கூறியுள்ளது.

இதேபோல், சில நாட்களுக்கு முன்பு டொராண்டோவில் ஹிமான்ஷி குரானா என்ற 30 வயது இந்தியப் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த மாணவரின் மரணம் கனடாவில் உள்ள இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாங்க் அவஸ்தி ஒரு திறமையான மாணவர் மட்டுமல்லாது, பல்கலைக்கழகத்தின் உற்சாகமூட்டும் (Cheerleading) குழுவிலும் உறுப்பினராக இருந்து அனைவரிடமும் அன்பாகப் பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.