டெல்லி மயூூர் விஹார் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், குழந்தைகளுக்குக் கால்பந்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளரை, பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி பகிரங்கமாக மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “இங்கே சம்பாதிக்கிறாய் என்றால் இங்கிருக்கும் மொழியைப் பேசக் கற்றுக்கொள். ஒரு மாதத்திற்குள் ஹிந்தி கற்கவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று ஆக்ரோஷமாக மிரட்டியுள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் அந்த நபரை, மக்கள் முன்னிலையில் ஒரு மக்கள் பிரதிநிதியே இப்படி ஒருமையில் பேசி அச்சுறுத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ரேணு சவுத்ரி பதிவிட்டுள்ள நிலையில், இது ஒரு இனவெறிச் செயல் (Xenophobia) என்று நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், “இந்தப் பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாகப் புகார்கள் வந்தன, அதிகாரிகளுடன் பேச அந்தப் பயிற்சியாளருக்கு ஹிந்தி தெரியாததால் தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது, அதனால் தான் அப்படிப் பேசினேன்” என்று கவுன்சிலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற இந்தியாவில், வெளிநாட்டுப் பயிற்சியாளர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் வீடியோ தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.