உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரஃபா மார்க்கெட் பகுதியில், கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கடந்த வியாழக்கிழமை மாலை நமக் கி மண்டி சந்தையில் அந்தப் பெண் பிச்சை கேட்டபோது, அப்பெண்ணின் நிறத்திற்கும் அவர் கையில் இருந்த குழந்தையின் நிறத்திற்கும் இடையே அதிக வேறுபாடு இருந்ததைக் கவனித்த வணிகர்கள், குழந்தை கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கோட்வாலி போலீசார் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் எஸ்.என். மருத்துவக் கல்லூரி அருகே குடிசைப் பகுதியில் வசிப்பதும், அவரது கணவர் தினக்கூலித் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. போலீசார் கேட்டதற்கு இணங்க, அந்தப் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்ததை அடுத்து, அந்தக் குழந்தை அவருடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் எவ்விதத் தவறும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.