இருசக்கர வாகனங்களில் பெற்றோருடன் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம். பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு பொதுநல மனுவை (PIL) விசாரித்த பிறகு, இருசக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் மற்றும் பாதுகாப்புப் பட்டையை கட்டாயம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கான ஹெல்மெட் மற்றும் பாதுகாப்புப் பட்டைகள் கிடைப்பதை உறுதி செய்ய போக்குவரத்துத் துறைக்கு நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. விபத்துகளில் சிக்கும் குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேர் உயிரிழப்பதாகவும், குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் ஹெல்மெட் தயாரிப்பதில்லை என்றும் விபத்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உத்தரவை அமல்படுத்துவது குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், மாநிலப் போக்குவரத்துத் துறை உடனடியாக ஹெல்மெட் உற்பத்தியாளர்கள், இருசக்கர வாகன டீலர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, அனைத்துக் கடைகளிலும் குழந்தைகளுக்கான ஹெல்மெட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பணித்துள்ளது.

அத்துடன், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பட்டைகளை பயன்படுத்துவதன் அவசியத்தையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இது தவிர, குழந்தைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களின் விலை நிர்ணயம் மற்றும் தேவைக்கான இருப்பை உருவாக்குவது தொடர்பாகவும், அவற்றின் அவசியம் குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தது.