தாயை பூமியில் கடவுளின் வடிவமாகக் கருதும் நிலையில், ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சை கூட்டில் இருந்து தூக்கி எறிவது போன்ற அதிர்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவில், தாய்ப்பறவை ஒன்று கூட்டில் தன் ஐந்து குஞ்சுகளுடன் அமர்ந்திருக்கிறது. அதில் நான்கு குஞ்சுகள் ஒரே அளவில் இருக்க, ஒரு குஞ்சு மட்டும் மிகவும் சிறியதாகவும், பலவீனமாகவும் காணப்பட்டது.

 

திடீரென அந்தத் தாய்ப்பறவை எந்தவிதத் தயக்கமும் இன்றி, தனது வாயால் அந்தக் குஞ்சைப் பிடித்து, கூட்டில் இருந்து கீழே தூக்கி எறிந்தது. இந்த அதிர்ச்சியான காட்சி, பார்ப்பவர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பறவையின் இந்தச் செயலை சிலர் ‘கொடுமையானது’ என்று கருதினாலும், வனவிலங்கு நிபுணர்கள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். “சில நேரங்களில் பறவைகள், தங்கள் கூட்டில் உள்ள பலவீனமான அல்லது நோயுற்ற குஞ்சுகளை வெளியேற்றிவிடும்.

ஏனெனில், அவற்றைப் பராமரிப்பதால் மற்ற குஞ்சுகளின் உயிர் வாழும் வாய்ப்பு பாதிக்கப்படலாம். இது இயற்கையின் விதி மற்றும் பிழைப்புக்கான போராட்டம்” என்று தெரிவித்துள்ளனர். @Predatorvids என்ற ‘எக்ஸ்’ கணக்கில் பகிரப்பட்ட இந்த 19 வினாடி வீடியோ, 1,41,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “எனது இதயம் நொறுங்கிவிட்டது.

ஒரு தாய் எப்படி இவ்வளவு கொடூரமாக இருக்க முடியும்?” என்று ஒரு பயனர் வேதனை தெரிவித்துள்ளார். பலரும், “இயற்கைக்குத் தனக்கென விதிகள் உண்டு, இங்கே உணர்ச்சிக்கு இடம் இல்லை, இது உயிர் பிழைப்பதற்கான போராட்டம்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.