82வது வெனிஸ் திரைப்பட விழாவில், இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப்பின் இறுதித் தருணங்களைச் சித்தரிக்கும் “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் ஆவணப்படம் சில்வர் லயன் விருதை வென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரெஞ்சு-துனிசிய இயக்குநர் கவுதர் பென் ஹனியா இயக்கிய இந்தப் படம், 2024 ஜனவரி 29 அன்று காசாவில் தப்பிச் செல்ல முயன்றபோது இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் சிக்கிய ஹிந்தின் குடும்பத்தின் கதையை உருக்கமாகச் சொல்கிறது. காரில் இருந்த ஹிந்தின் மாமா, மாமி மற்றும் மூன்று உறவினர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

உயிர் தப்பிய ஹிந்த், பாலஸ்தீன ரெட் கிரசண்ட் அமைப்பை அழைத்து, தனது மழலைக் குரலில் உதவி கோரினார். ஆனால், அவளை மீட்க வந்த இரு ஆம்புலன்ஸ் ஊழியர்களும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த ஆவணப்படம், ஹிந்தின் உருக்கமான அழைப்பின் உண்மையான ஆடியோ பதிவுகளைப் பயன்படுத்தி, பார்வையாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. வெனிஸ் திரைப்பட விழாவில் இப்படம் 23 நிமிடங்களுக்கு மேல் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்று, திரைப்பட விழாக்களில் அதிக நேரம் கைதட்டப்பட்ட படமாக புதிய சாதனை படைத்தது.

பார்வையாளர்கள் பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர். விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குநர் கவுதர் பென் ஹனியா, “இந்தப் படத்தால் ஹிந்தை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், அவளது குரல் உலகெங்கும் ஒலிக்கும்.

இது ஒரு சிறுமியின் கதை மட்டுமல்ல, ஒரு முழு தேசத்தின் துயரத்தைப் பிரதிபலிக்கிறது,” என்று உருக்கமாகக் கூறினார். இப்படம் துனிசியாவின் சார்பாக 98வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.